சென்னை, விருகம்பாக்கம், வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் கண்ணா (வயது 57). இவர் ‘நெஞ்சை தொட்டு சொல்லு’ என்ற சினிமாவை இயக்கி உள்ளார். மேலும் சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சியும் செய்து வந்தார். நேற்று ராமேஸ்வரத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கண்ணா சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார். அவருடன் அவரது நண்பர்கள் விஜயகுமார் (45), சுரேஷ்குமார் (54) ஆகிய இருவரும் புறப்பட்டனர்.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் கண்ணாவும் அவரது நண்பர்களும் மாலையில் சென்னைக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அவர்கள் வந்த கார் இரவு 9 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே திருமாந்துறை டோல்கேட்டை கடந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது சென்னையில் இருந்து மீன் லோடு ஏற்றிக் கொண்டு கேரளா நோக்கி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனை தாண்டி வந்து கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த கண்ணாவும், அவரது நண்பர்கள் விஜயகுமார், சுரேஷ்குமார் ஆகியோரும் சம்பவட இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 3 பேரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி டிரைவர் கடலூர் மாவட்டம் குன்னம் சாவடியை சேர்ந்த கார்த்திகேயன் (47) என்பவரை கைது செய்தனர்.
0 comments: